search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை அருகே பெண் கொலை"

    பெண்ணை கொன்று விட்டு தலைமறைவான கணவரை போலீசார் கைது செய்தனர். அவர்களது மகள்களும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    புதூர்:

    மதுரை அருகே திருமோகூரை அடுத்துள்ள இலங்கிபட்டியை சேர்ந்தவர் பெத்தன்பெருமாள் (வயது 60). இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு முத்தாலம்மன் (13), நாகேஸ்வரி (10), காமாட்சி (18) மற்றும் ஒரு ஆண் என 4 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 30-ந்தேதி இரவு கணவன்-மனைவிஇடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெத்தன் பெருமாள் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

    இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெத்தன் பெருமாளை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பெத்தன் பெருமாள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பெரியமலையத் தான்பட்டியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பெத்தன் பெருமாளை கைது செய்தனர்.

    தாய் கொலை செய்யப்பட்டு விட்டதாலும், தந்தை கைது செய்யப்பட்டதாலும் 3 மகள்கள் உள்பட 4 பேரும் அனாதையானார்கள். அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட உறவினர்களும் முன் வரவில்லை. இதனால் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் 4 பேரும் தவித்து வருகின்றனர். தற்போதைக்கு அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 4 குழந்தைகளுக்கும் உணவளித்து வருகிறார்.

    தாயை இழந்து, தந்தை சிறைக்கு சென்றுவிட்டதால் அனாதைகளாகிவிட்ட 4 குழந்தைகளையும் தொண்டு நிறுவனங்கள் தங்களது பராமரிப்பில் எடுத்து வளர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×